நேரலை

நேர்வழி அரசியலின் நிகழ்கால வடிவம் தமிழர்களமே!
மக்களுக்கே முழுஉரிமை!
ஊழலுக்கு முற்றுப்புள்ளி!
வன்முறைக்கு வழியடைப்பு!
எளியோருக்கும் இனியவாழ்வு!
இதுவே எமது பாதையும் இலக்கும்!
1991ஆம் ஆண்டு கர்நாடகத்தில் நடத்தப்பட்ட காவிரிக் கலவரத்தில் பல்லாயிரம் தமிழர்களின் உயிரும், உரிமைகளும், உடமைகளும் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கு பயின்று கொண்டிருந்த மூன்று சட்டக் கல்லூரி தமிழ் மாணவர்களை அது தட்டி எழுப்பியது! அவர்களுள் ஒருவர்தான் திரு. அரிமாவளவன். அவர்கள் அன்று போட்ட விதைதான் தமிழர்களமானது! இயக்கமாக உருவெடுத்த அக்களம் 2009 ஈழத் தமிழர் படுகொலையின் போது தமிழகத்தில் நடந்த இரண்டகமும் இருட்டடிப்பும் தீவிர அரசியல் பாதைக்குக் கொண்டு சென்றது! தமிழர் களத்தின் சமரசமற்ற அரசியல்பாதை பலருக்கு வியப்பையும் சிலருக்கு நெருடலையும் தந்தது! அரசியல்பாதையில் பயணித்த பலர் மட்டுமல்ல தமிழக ஊடகங்களும்கூட தமிழர்கள அரசியலையும் முன்னெடுப்புகளையும் வெகுவாகவே மறைத்தன, புறக்கணித்தன! அது ஏன்? தமிழ்த் தேசிய அரசியல் பேசிக்கொண்டிருந்த பலருக்குமே தமிழர்களத்தின் அரசியல் பாதை எட்டிக்காயாய் கசந்தது! ஆனால் தமிழகமும் தமிழினமும் தொடர் நெருக்கடிகளைச் சந்தித்தபோது தமிழர்களம் பயணித்த சமரசமற்ற அரசியல் பாதையே எதிர்காலத் தமிழகத்தின் ஒரே பாதை என்பதை கற்றோரும் பட்டறிவு பெற்றோரும் உணர்ந்து வருகின்றனர்!
ஊழலுக்கு எதிரான ஒன்றுகூடல், காவிரி உரிமை மீட்பில் ஆக்கபூர்வமாய் வைத்த கொளத்தூர் கொள்ளணை, கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டப் பங்களிப்புகள், மருந்துக் கொள்ளைக்கு எதிரான ஆக்கபூர்வப் போராட்டங்கள், நடுவணரசின் கல்விநிறுவனங்களில் தமிழ் மாணவர்கள் பயில வேண்டும் என்ற நோக்கோடு வினாத்தாள்களைத் தமிழில் தர நடத்திய போராட்டங்கள், கருவேல மர ஒழிப்பில் களமிறங்கியது, முத்துக்குமார் மர நடு இயக்கம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைக்குரலாய் ஒலித்தது, தமிழ் தமிழ் என்று மேடைகளில் மட்டும் ஒலித்துக் கொண்டிருக்கிற “பேச்சாளர்கள்” நடுவில் தமிழகமே வியக்கும் ஓர் தரமான தமிழ்ப்பள்ளியை நிறுவி வெற்றிகரமாய் நடத்திக் கொண்டிருப்பது போன்ற பல களச் செயல்பாடுகள் என்பன தேர்தல் காலத்துப் பறக்கும் பட்டங்கள் அல்ல! நடைமுறைக்கு வந்த நல்ல செயல்கள்! நாங்கள் விதைக்கிற காலத்திலும் உழைக்கிற மக்கள் என்று சொல்ல வருகிறோம்! ஆட்சிக்கு வந்தபின் வானத்தை வில்லாய் வளைப்போம் என்று வெற்றுக் கூச்சல்போடும் வணிக அரசியல் அல்ல நாங்கள் செய்தது! ஆராவரமில்லாமல் விளம்பரமில்லாமல் நடத்திக் காட்டிய நாகரீக அரசியலே தமிழர்களத்தில் அரசியல்பாதை!!
ஒற்றை நோக்கமும் உயரிய நோக்கமும் கொண்ட தமிழர் நலனின் ஈடுபாடு கொண்ட இயக்கங்களும் அமைப்புகளும் கட்சிகளும் ஒன்றுகூடும் வேளையில் தமிழர்களத்தின் அரசியல் கோட்பாடுகளை அறிவிக்கும் ஒன்றுகூடல்!
இடம்: சென்னை பல்லாவரம் அல்ஸ்தோம் தொழிலாளர் முன்னேற்ற சங்கக் கட்டிடம்
எண்:9, பழைய நெடுஞ்சாலை, பல்லாவரம் அஞ்சல் நிலையம் பின்புறம்.
நாள்: 2017 பிப்ரவரி மாதம் 4ஆம் நாள்
நேரம்: மாலை 4 மணிக்கு
கலைநிகழ்ச்சி: தமிழர்களத்தின் மையக் கலைக்குழு, மாணவர் கலைக்குழு